விளையாட்டு

ஐபிஎல் அரங்கில் 350 சிக்ஸர்களை கடந்த முதல் வீரர்: புதிய சாதனையை படைத்தார் கிறிஸ் கெய்ல்!

EllusamyKarthik

ஐபிஎல் அரங்கில் 350 சிக்ஸர்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கிறிஸ் கெய்ல்.

41 வயதான இந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்காக விளையாடி இருந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் இரண்டு சிக்ஸர் அடித்திருந்தார். அதில் அவர் அடித்த முதல் சிக்ஸ் ஐபிஎல் அரங்கில் சாதனையாக அமைந்தது. மொத்தம் 133 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 351 சிக்ஸர்களை இதுவரை பதிவு செய்துள்ளார். 

அதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள டிவில்லியர்ஸ் 237 சிக்ஸர்களும், மூன்றாவது இடத்தில் உள்ள தோனி 216 சிக்ஸர்களும் அடித்துள்ளனர். 

அதுமட்டுமல்லாது ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராகவும் கெய்ல் உள்ளார். அவர் கடந்த 2013ல் ஆர்சிபி அணிக்காக விளையாடிய போது 17 சிக்ஸர்கள் விளாசி இருந்தார். அதோடு அந்த இன்னிங்ஸில் 175 ரன்களையும் குவித்திருந்தார். இன்று வரை ஐபிஎல் அரங்கில் தனி ஒரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்களும் அது தான்.