ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், காயமடைந்துள்ள தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா பங்கேற்க மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. டிசம்பர் 6ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய போர்டு லெவன் அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாவை, டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதற்காக முரளி விஜய்யுக்கு பயிற்சி ஆட்டத்தில் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் அவர் பயிற்சி ஆட்டத்தின் போது, எல்லைக்கோட்டின் அருகே அவர் பந்தை பிடிக்க முயன்றபோது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் நடக்க முடியவில்லை. பிசியோதெரபிஸ்ட் அங்கு சென்று சிகிச்சை அளித்தார். இருந்தாலும் அவரால் நடக்க முடியாததால் டிரெஸ்சிங் ரூமுக்கு அவரை தூக்கிக்கொண்டு வந்தனர்.
பின்னர் அவரை ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காயம் வலுவாக இருப்பதால் அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவர் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. இல்லை எனில் ஷிகர் தவான் அல்லது மயங்க் அகர்வால் ஆகியோரில் ஒருவர் அழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.