இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த சனிக்கிழமை அவரது ஸ்டைலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதனையடுத்து தோனியின் வழியை பின்பற்றி அவரது சிஷ்யரான சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
தோனி மற்றும் ரெய்னாவின் அறிவிப்புக்கு பின்னர் பலரும் அவர்களை பாராட்டியும், இந்திய அணிக்காக அவர்கள் ஆடிய அபாரமான இன்னிங்ஸ்களையும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தோனிக்கு நேற்று கடிதத்தின் மூலம் வாழ்த்து சொல்லியிருந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவுக்கும் கடிதம் மூலம் வாழ்த்து சொல்லியுள்ளார்.
‘இந்திய அணி 2011 உலக கோப்பையை வெல்ல நீங்கள் ஆஸ்திரேலியா (காலிறுதி) அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய ஆட்டம் பைனல் வரை செல்ல இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அகமதாபாத்தில் நடந்த அந்த போட்டியில் நான் நேரில் பார்த்திருந்தேன்.
நிச்சசயமாக நான் உட்பட கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உங்களது கவர் டிரைவ் உட்பட பல ஷாட்களை மிஸ் செய்வார்கள். சிறந்த டி20 போட்டியின் வீரரான நீங்கள் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் அணிக்கு தேவைப்படும் போது பவுலிங்கிலும் கை கொடுப்பீர்கள்.
மிக இளம் வயதில் ஆற்றலோடு உங்களது ஒய்வு முடிவை எடுத்துள்ளீர்கள். உங்களது வருங்கால நாட்கள் இனிதாக அமைய வாழ்த்துகள். உங்களது ஆட்டத்தினால் விளையாட்டில் இந்தியாவை தலைசிறந்த நாடாக உயர்த்தியமைக்கும், இளைஞர்களை ஊக்குவித்தமைக்கும் நன்றி’ என பிரதமர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்த ரெய்னா ‘நாட்டுக்காக நாங்கள் விளையாடும்போது எங்கள் இரத்தத்தையும், வியர்வையையும் தருகிறோம். நாட்டு மக்களால் நேசிக்கப்படுவதும், பிரதமரால் பாராட்டப்படுவதும் அதற்கான பலன். பிரதமர் மோடியின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. அதனை நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்’ என தெரிவித்துள்ளார்.