விளையாட்டு

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றோருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Sinekadhara

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். வட்டு எறிதல் போட்டியில் யோகேஷ் கத்தூனியா வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார். ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்களான தேவேந்திரா வெள்ளிப்பதக்கமும், சுந்தர்சிங் குர்ஜார் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளனர். இதுவரை இந்தியா 7 பதக்கங்களை பெற்றுள்ள நிலையில் இவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர்.

மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், யோகேஷ் கத்தூனியா சிறப்பாக விளையாடியதாகவும், அவருடைய வெற்றி மற்ற வீரர்களுக்கும் ஓர் ஊக்குவிப்பாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேவேந்திராவை வாழ்த்திய அவர், சிறப்பாக விளையாடியதாகவும், இந்தியாவை தொடர்ந்து சிறப்பித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலம் வென்றது குறித்து இந்தியா மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், அவர் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புடன் விளையாடியதாகவும் குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற அனைவரையும் குறிப்பிட்டு அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்திருக்கிறார்.