விளையாட்டு

“எனது ஹீரோ தோனி தலைமையின் கீழ் விளையாடும் நெடுநாள் கனவு பலித்துள்ளது”- ஷிவம் தூபே

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஷிவம் தூபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அதனால், எதிர்வரும் ஐபிஎல் சீசனில் அவர் சென்னை அணிக்காக விளையாட உள்ளார். அண்மையில் அவருக்கு மகன் பிறந்திருந்தார். தற்போது மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் விளையாட உள்ளார். 

இந்நிலையில் சென்னை அணியில் தோனியின் கீழ் விளையாட உள்ளது குறித்து தனது எண்ண ஓட்டத்தை பகிர்ந்துள்ளார் தூபே. 

“கடந்த 09-ஆம் தேதி எனக்கு மகன் பிறந்திருந்தான். ரஞ்சி கோப்பையில் நான் விளையாட உள்ள காரணத்தால் என்னால் அவனுடன் நேரம் செலவிட முடியவில்லை. அவன் பிறந்த நேரம் எனக்கு ராசியானதாக அமைந்துள்ளது. 

எனது ஹீரோ தோனி தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்ற எனது நெடுநாள் கனவு இப்போது பலித்துள்ளது. அவரது தலைமையில் நான் விளையாட உள்ள நாளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். நிறைய வீரர்கள் அவரது கேப்டன்சியின் கீழ் நம்பிக்கையுடன் விளையாடியாதை பார்த்துள்ளேன். இப்போது அந்த அனுபவம் எனக்கும் கிடைக்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி அதன் மூலம் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் களத்தில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிக்காக தூபே விளையாடி உள்ளார். கடந்த சீசனில் அவர் சென்னை அணிக்கு எதிராக 42 பந்துகளில் 64 ரன்கள் விளாசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.