இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பேட்டிங் மட்டுமல்ல அவரது விக்கெட் கீப்பிங் பற்றியும் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் பெரும்பாலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை மட்டுமே நம்பியுள்ளது. இருவரும் முறையே 440, 382 ரன்கள் எடுத்தனர். ரோகித் 3 சதம், ஒரு அரைசதம் அடித்தனர். கேலி தொடர்ச்சியாக 5 அரைசதம் விளாசியுள்ளார். சிறப்பாக விளையாடி வந்த ஷிகர் தவானும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிவிட்டார். வேறு யாரும் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இந்திய அணியின் அனுபவம் மிக்க வீரரான தோனி மீது உலகக் கோப்பை தொடங்கும் முன்பு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அவரது பேட்டிங் திறனை மட்டும் நம்பியில்லை. சர்வதேச அளவில் விக்கெட் கீப்பிங்க் தோனி சிறந்த வீரர் என்பது முக்கியமான காரணம். மற்றொரு காரணம் கேப்டனாக இருந்து அவர் ஆலோசனை செய்து அணியை வழிநடத்துவார் என்பது. ஆனால், பெரும்பாலும் தோனியின் ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
ஐபிஎல் தொடரின் போது பார்த்த அந்த வேகமான தோனியை ஒரு போட்டியில் கூட பார்க்க முடியவில்லை. ஆப்கான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான அவர் பேட்டிங் செய்த விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையிலே இருந்தது. தன்னுடைய நிதான ஆட்டத்திற்காக ஏற்கனவே பலமுறை தோனி விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார். இது ஒன்றும் புதிதல்ல. ஆனால், தற்போது அவர் மீதுள்ள விமர்சனம் அதுவல்ல. அடிக்க முற்பட்டு முடியாமல் போனால் பரவாயில்லை, அடித்து விளையாட வேண்டும் என எண்ணமே இல்லாதது போல் தோனி விளையாடுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தோனியின் பேட்டிங் மட்டுமல்ல, அவரது விக்கெட் கீப்பிங்கும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. தன்னுடைய மின்னல் வேக ஸ்டம்பிங்கிற்கு பெயர் போனவர் தோனி. அப்படிவொரு ஸ்டம்பிங்கை இந்தத் தொடரில் இதுவரை பார்க்க முடியவில்லை. அப்படியிருந்தாலும் பரவாயில்லை. நிறைய ஸ்டம்பிங் வாய்ப்புகளை தோனி கோட்டை விட்டுள்ளார். பந்து நிறைய நேரங்களில் அவரிடம் கேட்ச் ஆகாமல் நழுவி விடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவரது விக்கெட் கீப்பிங் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. அவ்வளவு பந்துகளை தவறவிட்டார். தோனியா இது என்னும் அளவிற்கு ஆகிவிட்டது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோனி வெறும் 4 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், அதிக ரன்களை பைஸ் மூலம் விட்டுக் கொடுத்த கீப்பராக இந்தத் தொடரில் அவர் உள்ளார். மொத்தம் 19 ரன்களை அவர் விட்டுக் கொடுத்துள்ளார்.
விக்கெட் சரிபார்க்கும் டிஆர்எஸ் முறைக்கு தோனியின் பெயரினையே வைத்து ‘தோனி ரிவியூ சிஸ்டம்’ என ரசிகர்கள் அன்புடன் அழைத்தார்கள். பேட்டிங் செய்யும் வீரர்களின் பேட்டிங் பந்து எவ்வளவு லேசாக பட்டாலும் தோனி துல்லியமாக கணித்து சொல்லிவிடுவார். விக்கெட் இல்லையென்றாலும் இல்லையென தெளிவாக ஒத்துக் கொள்வார். அந்தளவுக்கு ஸ்டம்பிற்கு பின்னார் சிறப்பாக செயல்பட்டு வந்தவர் தோனி.
ஆனால், நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோனியின் கணிப்புகள் பெரும்பாலும் தவறாகவே இருந்து வருகிறது. பல நேரங்களில் அணிக்கும் அது பாதகமாக முடிந்துவிடுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ராய் பேட்டிங் செய்த போது பந்து அவரது கையுறையில் உரசிச் சென்று தோனியின் வசம் சென்றது. நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. தோனியும் அதனை சரியாக கணிக்க தவறிவிட்டர். ரிப்ளேவில் அது கையுறையில் பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது.