விளையாட்டு

'இங்கு யாருமே நிரந்தரம் கிடையாது' - கே.எல்.ராகுலுக்கு கம்பீர் ஆறுதல்

JustinDurai

இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் கே.எல்.ராகுல் சமீபத்தில் நடந்த வங்கதேச டெஸ்ட் தொடரிலும் 22, 23, 10, 2 என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் இலங்கைக்கு எதிரான இந்தியாவின் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மட்டுமின்றி கே.எல்.ராகுலிடம் இருந்த துணைக் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியாவிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுலுடன் லக்னோ அணியில் பணிபுரியும் கவுதம் கம்பீர் அவருக்கு பல்வேறு அறிவுரைகள் கூறியுள்ளார். அதில், ''நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். தேர்வுக்குழுவை கட்டுப்படுத்த முடியாது. அடுத்த தொடரில் என்ன நடக்கும் என்பதை முடிவு செய்ய முடியாது. எனவே இந்த முறை இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி விளையாட வேண்டும்.

நம்மால் மாற்ற முடியாத விஷயத்தை நினைத்து நம்மை நாமே அழுத்தத்தில் போட்டுக்கொள்ள கூடாது. நீங்கள் சரியாக ஆடவில்லை என்றால் வேறு ஒருவர் வரத்தான் செய்வார். அது சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுலுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கும் இதே நிலைமைதான். அவர்கள் குறித்தும் நீங்கள் கேள்வி எழுப்பலாம். யாருமே இங்கு நிரந்தரமானவர்கள் கிடையாது. சிறப்பாக விளையாடி இடத்தை தக்க வையுங்கள்'' என கம்பீர் கூறியுள்ளார்.