விளையாட்டு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்தலுக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம்

webteam

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவு மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் நவம்பர் 5 ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். அதில், மாவட்ட கிளப்புகள் சார்பில் ஒருவர் மட்டுமே வாக்களிக்க முடியும். சம்மந்தப்பட்ட கிளப் பரிந்துரை செய்யும் உறுப்பினர் மட்டுமே கிரிக்கெட் சங்க தேர்தலில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாவட்ட கிளப் பரிந்துரை செய்யாத வாக்காளர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடும் பட்டியலில் உள்ளதாகக் கூறி, துர்கேம்புடி சிவகேசவ ரெட்டி உள்ளிட்ட பலர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தேர்தல் அதிகாரி அறிவித்தபடி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலை நடத்தலாம். தேர்தல் முடிவுகள் இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டார்.

மேலும், மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்கும்படி சங்கங்களுக்கான மாவட்ட பதிவாளர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தேர்தல் அதிகாரி சந்திரசேகரன் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சிவகேசவ ரெட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை, அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.