விளையாட்டு

உலக கோப்பை போட்டிக்கு தகுதிபெறவில்லை! மைதானத்தை போர்க்களமாக்கிய நைஜீரிய ரசிகர்கள்!

webteam

கால்பந்து உலகக் கோப்பை போட்டியின் தகுதிச் சுற்றில் நைஜீரியா அணி தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டு மைதானத்தை போர்க்களமாக்கினர்

2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கால்பந்து உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தகுதிச் சுற்றில் நைஜீரியா மற்றும் கானா (GHANA) ஆகிய அணிகள் மோதின. நைஜீரியாவின் மிகப்பெரிய மைதானங்களில் அபியோலோ மைதானத்தில் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. 60 ஆயிரம் அமர்ந்து ஆட்டத்தைப் பார்க்கும் வசதி கொண்ட மைதானம் இது. ஒரு மில்லியன் டாலர் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மைதானத்தில் அரங்கம் முழுக்க ரசிகர்கள் நிறைந்திருந்தனர். போட்டியை காண நைஜீரிய தலைநகரில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்கப்பட்டது. மைதானத்திற்கு ரசிகர்கள் சிரமமின்றி வந்து செல்ல புறநகர்ப் பகுதிகளிலிருந்து இலவச போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது.

போட்டி துவங்கியது அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இரு அணிகளும் தலா ஒரு கோல் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது. இருப்பினும் அவே கோல்கள் அடிப்படையில் கானா அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் கூச்சலிட துவங்கினர். இருக்கைகளில் இருந்து வெளியேறி மைதானத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பெஞ்சுகள், நாற்காலிகள், பொருட்களை அடித்து நொறுக்கினர். நைஜீரியா கால்பந்து சம்மேளனத்தின் (NFF) தலைவர் அமாஜு பின்னிக்கை சில ரசிகர்கள் வசைபாடத் துவங்கினர். கோபமான ரசிகர்களை நைஜீரிய பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்