விளையாட்டு

4 வது வரிசைக்கு ஸ்ரேயாஸ், மணீஷ் பாண்டே: புதிய பேட்டிங் பயிற்சியாளர் தகவல்!

webteam

இன்னும் முடியவில்லை, இந்திய கிரிக்கெட் அணியின் 4 வது வரிசை வீரர் தேர்வு. யாரை மாற்றிப் பார்த்தும் அந்த இடம் காலியாகவே இருக்கிறது. இரண்டு போட்டிகளில் நின்று ஆடுகிறவர்கள், அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பி விடுகிறார்கள். இதனால் மிடில் ஆர்டர் வரிச்சைக்கு ஆடுபுலி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்துக்கு ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே சரியாக இருப்பார்கள் என்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராகத் தேர்வாகியிருக்கும் விக்ரம் ரத்தோர்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த ஒரு நாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர். மணீஷ் பாண்டே, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்திருந்தார்.

இந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும்போது, ’இந்திய அணியின் மிடில் ஆர்டர், சரியான நிலையில் இல்லை என்பது உண்மைதான். அதை சரிசெய்து விட முடியும். ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த சில போட்டிகளில் நன்றாக விளையாடி இருக்கிறார். மணீஷ் பாண்டேவும் இருக்கிறார். இந்திய ஏ அணிக்காக உள்ளூர் போட்டிகளில் அவர்கள் நன்றாக ஆடியுள்ளனர்.

நான்காவது வரிசைக்குப் பொருத்தமானவர்களாக இவர்கள் இருப்பார்கள். அதில் சந்தேகம் இல்லை. அவர்களிடம் போது மான திறமை இருக்கிறது. அவர்களை சரியாகத் தயார்படுத்த வேண்டும்’ என்றார்.