விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: வரலாற்றை வசப்படுத்தும் ஆற்றலுடன் நவோமி ஒசாகா

jagadeesh

ஒலிம்பிக் டென்னிஸில் சொந்த மண்ணில் புதிய வரலாறை படைப்பதற்கான உத்திகளை வகுத்து வருகிறார் நவோமி ஒசாகா.

பிரஞ்ச் ஓபன் மட்டுமின்றி விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்பதை தவிர்த்து இருக்கிறார் ஜப்பானின் நவோமி ஒசாகா. மன அழுத்தம் காரணமாக போட்டிகளை தவிர்த்து விட்டதாக ஒசாகா அறிவித்திருக்கிறார். ஆனால், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை குறி வைத்தே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என நம்புகின்றனர் ஜப்பானியர்கள். 2018 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஓபனில் ஆச்சர்யமளிக்கும் வகையில் பட்டத்தை வென்றார் ஒசாகா.

கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் ஜப்பானியர் என்ற சாதனையையும் அப்போது வசப்படுத்தினார். பின்னர் 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த ஆசியாவை சேர்ந்த முதல் வீராங்கனை என்ற வரலாற்றையும் படைத்தார். தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்க ஓபனில் சாதித்தார். அந்த வெற்றி இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸிலும் தொடர்ந்தது. மொத்தமாக 4 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் ஒசாகா.

சர்வதேச டென்னிஸ் தரநிலையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் 23 வயது நவோமி ஒசாகா, ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்லும் முதல் ஜப்பானியர் என்ற வரலாற்று சாதனையை டோக்கியோ களத்தில் எதிர்நோக்கி உள்ளார்.