விளையாட்டு

’என்ன சொன்னார் தோனி?’ சுழற் பந்துவீச்சாளர் நதீம் விளக்கம்!

webteam

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், ராஞ்சி மைதானத்துக்கு வந்த தோனியிடம் பேசியது என்ன? என்பது பற்றி, சுழல்பந்துவீச்சாளர் நதீம் தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 335 ரன்கள் பின் தங்கியது. ஃபாலோ ஆன் பெற்ற அந்த அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன்களைச் சேர்க்கத் தடுமாறி, 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டிருந்த நதீம் (Shahbaz Nadeem) ,  4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். போட்டிக்கு பிறகு ஓய்வறைக்கு வந்த மகேந்திர சிங் தோனி, வீரர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார். அப்போது நதீமுடன் தோனி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின. 

இதுபற்றி நதீமுடன் கேட்டபோது, ‘’போட்டிக்குப் பின் தோனியை சந்தித்தபோது, ‘எனது ஆட்டம் எப்படியிருக்கிறது?’ என்று கேட்டேன். ‘உனது பந்துவீச்சை பார்க்கிறேன். இப்போது பந்துவீச்சில் முதிர்ச்சித் தெரிகிறது. அதற்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடியதுதான் காரணம். உனது பயணம் தொடங்கிவிட்டது. வாழ்த்துகள்’ என்று தெரிவித்தார்’’ என்றார் நதீம்.