விளையாட்டு

என்னைக் கேள்விக்குள்ளாக்குவதா? முரளி விஜய் வருத்தம்

என்னைக் கேள்விக்குள்ளாக்குவதா? முரளி விஜய் வருத்தம்

webteam

தென்னாப்பிரிக்காவில் ரன் குவிக்க முடியாமல் போனது ஏன் என்பதற்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் தமிழக வீரருமான முரளி விஜய் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது: 
தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் நான் சரியாக விளையாடவில்லை. நிலைத்து நின்று அதிக ரன்கள் குவிக்கவில்லை. சரியான ஷாட்களை தேர்வு செய்து ஆடாததுதான் அதற்கு காரணம். அதோடு தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்துவீசி திறமையாக விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அவர்களின் ஆடுகளமும் வித்தியாசமாக இருந்தது. அங்கு சில அனுபவங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. வெளிநாட்டில் வெற்றி பெறுவது ஸ்பெஷலான ஒன்று. இந்திய அணி, ஒரு நாள் தொடரை கைப்பற்றியிருப்பது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது.

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டிக்காக, தமிழ்நாட்டு அணியில் நான் ஆடாதது சர்ச்சையாக்கப்பட்டு விட்டது. மும்பைக்கு எதிரான அந்த முக்கியமான போட்டியில் ஆடியிருக்க வேண்டும். காயம் காரணமாக விளையாட முடியாமல் போய்விட்டது. இதுபற்றி சம்மந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தேன். இருந்தும் எனது அர்ப்பணிப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்திருக்கிறது.

தமிழ்நாட்டு அணிக்காக விளையாடுவதை எப்போதும் விரும்புகிறேன். அதை பெருமையாகவே நினைக்கிறேன். இதுபற்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் விரைவில் பேசுவேன். ரஞ்சி போட்டியில் தமிழகம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதில்தான் இப்போது என் கவனம் இருக்கிறது. கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
இவ்வாறு முரளி விஜய் கூறினார்.