இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீண்டுமொரு மின்னல் ஸ்டம்பிங் செய்து அசத்தியுள்ளார்.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி கொழும்பு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தரங்கா, டிக்வில்லா ஆட்டமிழந்த போதும், முனவீரா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். ஆட்டத்தின் 7-வது ஓவரை இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாகல் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை இலங்கை வீரர் மேத்யூஸ் சந்தித்தார்.
அப்போது மேத்யூஸ் தனது ஒரு காலை கிரீஸில் வைத்து கொண்டு, மற்றொரு காலை முன்னோக்கி வைத்து பந்தினை எதிர் கொள்ள முற்பட்டார். ஆனால் பந்து பின்னே சென்றுவிட்டது. பந்தை பிடித்த தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார். மேத்யூஸ் கால் கிரீஸ் கோட்டில் இருந்தது போல் தெரிந்த நிலையிலும், தோனி உரத்த குரலில் ஸ்டம்பிங் கேட்டார்.
மூன்றாவது நடுவரின் ரிபிளே-யில் அவுட் என்பது தெரியவந்தது. இதன் மூலம் தோனி மற்றொரு மிக வேகமான ஸ்டம்பிங்கை செய்துள்ளார். மைக்ரோ நொடிகளில் பைல்களை தோனி பறக்கவிட்டார். இலங்கை வீரர் மேத்யூஸ் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவரது விக்கெட் முக்கியத்துவம் வாய்ந்தது. மேத்யூஸ் நிலைத்து நின்று ஆடி இருந்தால் இலங்கை 200 ரன்களை எட்டி இருக்கும்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக 100 ஸ்டம்பிங் செய்த தோனி, சாதனை பயணத்தை தொடர்ந்து வருகிறார்.