விளையாட்டு

தோனியின் கிரிக்கெட் அகாடமி கனவு!

webteam

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட் பயிற்சி மையத்தை துபாயில் தொடங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் தங்கள் சொந்த மாநிலங்களில் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகின்றனர். இதில் சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் உட்பட பலர் அடங்குவர். இதில் பயிற்சி பெற்ற பலர் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்துள்ளனர். 
அந்த வகையில் கிரிக்கெட் வீரர் தோனியும் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். ’எம்எஸ் தோனி கிரிக்கெட் அகாடமி’ என்ற பெயரிலான இந்தப் பயிற்சி மையத்தை இந்தியாவில் அல்லாமல், துபாயில் தொடங்கியுள்ளார். 
தோனியுடன் பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்பும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் கிளப்பும் இணைந்து இதைத் தொடங்கியுள்ளது.

இத தொடக்க விழாவில் பேசிய தோனி, ‘இந்த கிளப்புடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி. விளையாட்டை பல்வேறு வழிகளில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று நினைப்பவன் நான். அது என் கனவு. அதன் முதல் படியாக இதை நினைக்கிறேன். இதை வெற்றிகரமானதாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்’ என்றார்.

இந்தப் பயிற்சி மையத்தில் இளம் வீரர்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் பயிற்சியளிக்க உள்ளனர். இந்த கிரிக்கெட் அகாடமியை ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து நாடுகளிலும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.