விளையாட்டு

தோனி கொடுத்த வாய்ப்பு ! டெஸ்ட் போட்டிகளி்ல் நிரூபித்த விராட் கோலி ! - சஞ்ஜய் மஞ்சரேக்கர்

jagadeesh

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கும் நிலையிலிருந்த விராட் கோலியை தோனி காப்பாற்றியதன் காரணமாக அவர் மீண்டும் தன்னை நிரூபித்தார் என்று முன்னாள் வீரர் சஞ்ஜய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. அதேசமயம் டி20 தொடரை வென்றது. இவ்விரு அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்கும் விராட் கோலி, அதற்கடுத்த 3 போட்டிகளில் பங்கேற்கமாட்டார். அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இந்தியா திரும்புகிறார்.

சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேசிய சஞ்ஜய் மஞ்சரேக்கர் "கோலி என்றால் அது கோலிதான். அவருக்கு எப்படி ரன் எடுக்க வேண்டும் என்ற வித்தை தெரியும். 2011-2012 ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் கோலி சதமடித்தார். அந்தத் தொடரில் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்களில் அவர் மட்டுமே சதமடித்தார். வேறு யாரும் அடிக்கவில்லை. அப்போது கோலிக்கு மிகவும் இளம் வயது. சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின்பு அவரை அணியிலிருந்து நீக்கலாம் என முடிவெடுக்கப்பட்டு இருந்தது" என்றார்.

மேலும் பேசிய அவர் "அணியிலிருந்து நீக்கப்படும் நிலையிலிருந்த கோலியை, தோனிதான் காப்பாற்றினார். அவர்தான் கோலியை அணியிலிருந்து தூக்காமல் இருப்பதற்கு உறுதுணையாக இருந்தார். அதன்பின்பு பெர்த் டெஸ்ட் போட்டியில் 70 ரன்கள் எடுத்தார், பின்பு அடுத்தப் போட்டியில் சதமடித்தார். தனக்கு தோனி கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நிரூபித்தார் கோலி. அதன் பின்பு 2014-2015 இல் 4 சதங்களை விளாசினார் கோலி " என்றார் சஞ்சய் மஞ்சரேக்கர்.