விளையாட்டு

‘மிதாலி ராஜை வழி நடத்துவதில் சிக்கல்’ - மவுனத்தை கலைத்தார் ரமேஷ் பவார்

‘மிதாலி ராஜை வழி நடத்துவதில் சிக்கல்’ - மவுனத்தை கலைத்தார் ரமேஷ் பவார்

rajakannan

மித்தாலி ராஜ் நீக்கப்பட்ட விவகாரத்தில், பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தற்போது தனது மவுனத்தை கலைத்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இந்த முக்கியமான போட்டியில் சாதனை வீரர் மிதாலி ராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார். இத்தனைக்கும் அந்தத் தொடரில் மிதாலி ராஜ் சிறப்பாகவே விளையாடினார். 

இதையடுத்து மிதாலி ராஜின் மேனேஜர் அனிஷா குப்தா, ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக விளாசினார். இந்திய மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் இருந்து திரும்பியதுமே, மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோரை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர்.

பின்னர், பிசிசிஐ-க்கு எழுத்து பூர்வமாக மிதாலி ராஜ் அளித்த கடிதத்தில், “இந்த நாட்டுக்காக 20 ஆண்டுகாலம் கிரிக்கெட் ஆடியுள்ளேன். ஆனால் முதல்முறையாக என் கிரிக்கெட் வாழ்க்கையில் இப்போது சோர்வடைந்துள்ளேன். அணியில் அதிகாரம் இருப்பவர்களால் என் நம்பிக்கையை உடைக்க பார்க்கிறார்கள். இப்போது எனக்கு முதல் முறையாக ஒரு எண்ணம் தோன்றுகிறது. இப்படியொரு நேரத்தில் இந்நாட்டுக்கான எனது சேவை மதிப்புடையதா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், நான் பயிற்சியில் ஈடுபட்டால் அங்கே இருந்து விலகி செல்வது, பேச வந்தால் போனை பார்த்துக் கொண்டே விலகுவது என்று ரமேஷ் பவார் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டிய மித்தாலி ராஜ், போட்டியில் விளையாடாமல் எவ்வாறு பவரால் தடுக்கப்பட்டேன் என்பது குறித்தும் விரிவாக அந்த கடிதத்தில் எழுதியிருந்தார். 

இந்நிலையில், மித்தாலி ராஜ் நீக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை பேசாமல் இருந்து வந்த பயிற்சியாளர் ரமேஷ் பவார் தற்போது தனது மவுனத்தை கலைத்துள்ளார். “மித்தாலி ராஜ் தனித்து செயல்படும் தன்மை கொண்டவராக இருக்கிறார். அவரை வழிநடுத்துவது எளிதாக இல்லை. இங்கிலாந்து அணிக்கு எதிராக குறைவான பேட்டிங் சராசரி வைத்திருந்தார் என்ற கிரிக்கெட் புள்ளியல் அடிப்படியில் தான் மித்தாலி ராஜ் நீக்கப்பட்டார். வெற்றிக்கான அணியை தேர்வு செய்ய வேண்டும் என்பதே நோக்கம். காழ்ப்புணர்ச்சி காரணம் அல்ல” என்று பிசிசிஐ இடம் ரமேஷ் பவார் கூறியுள்ளார்.