டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு இன்று நாடு திரும்பினார். பதக்கத்துடன் தாய்நாட்டுக்கு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜப்பானில் இருந்து புறப்பட்ட மீராபாய் சானு இன்று டெல்லி வந்தடைந்தார்.
டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தான் மேற்கொண்ட கடின உழைப்புக்கு வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி தருவதாக மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.