விளையாட்டு

MI Vs RR: தொடையில் காயம்... இன்றும் சந்தேகத்தில் ரோகித் சர்மா..!

webteam

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா களம் இறங்குவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இரண்டு சூப்பர் ஓவர்களுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக பொல்லார்டு அந்த அணியை வழி நடத்தினார்.

இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்து இதுவரை தெளிவான அறிக்கை வெளிவரவில்லை. இதனால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ரோகித் சர்மா காயத்தால் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.