விளையாட்டு

“குழந்தையை காப்பாற்றியிருக்கலாம்..” - கரூரில் முற்றுகையிடப்பட்ட தனியார் மருத்துவமனை!

kaleelrahman

கரூரில் உரிய சிகிச்சை அளிக்காததால் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி தனியார் மருத்துவமனை முன்பு குழந்தை உடலுடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் வாங்கப்பாளையத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி கீர்த்தி பிரியா இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது, பிரசவத்திற்காக கடந்த 19ம் தேதி கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து 20ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த குழந்தையை அழவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து குழந்தையை ஐசியூவில் வைத்திருந்த நிலையில், இன்று காலை குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி, தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து பெற்றோர் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்தது.

இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை எடுத்து வந்த பெற்றோர், தனியார் மருத்துவமனை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என முறையிட்டனர்.

இந்நிலையில், தகவலறிந்த அங்கு வந்த கரூர் டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார், மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் உரிய சிகிச்சை அளித்ததாக விளக்கம் அளித்ததை அடுத்து, மருத்துவமனை முற்றுகையையிட்ட பெற்றோர் கலைந்து சென்றனர்.