சவாலான ஆடுகளங்களில் விளையாவது எனக்குப் பிடித்தமான ஒன்று என்று இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா கூறினார்.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 172 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. புஜாரா மட்டும் நிலைத்து நின்று 52 ரன்கள் எடுத்தார். பின்னர் இலங்கை அணி தனது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
அரை சதம் அடித்தது குறித்து புஜாரா கூறும்போது, ‘ இந்த ஆடுகளம் சவாலாக இருந்தது. இதுபோன்ற ஆடுகளங்களில் ஆடுவது எனக்குப் பிடிக்கும். கவுன்டி கிரிக்கெட்டில் இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் புரிந்துகொண்டு ஆட எனக்கு உதவியது. இத்தகைய ஆடுகளங்கள் தான் எனது ஆட்ட நுணுக்கங்களுக்கும், மனஉறுதிக்கும் பொருத்தமானது. கடினமான ஆடுகளங்களில் என்னை நானே ஊக்கப்படுத்தி நீண்ட நேரம் விளையாட முயற்சிக்கிறேன். இந்த டெஸ்டில் 4-ஆம் நாள் (இன்று) ஆட்டம் முக்கியமானது. இன்று சில விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி விட்டால் வெல்ல வாய்ப்பிருக்கிறது’ என்றார்.