ஆஸ்திரேலியாவுக்கு அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், தோனியிடம் நடுவர் ஆலோசனை கேட்ட காட்சிகள் வைரலாகியுள்ளது.
ராஞ்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் எடுத்தது. இதில், 42வது ஓவரை குல்தீவ் யாதவ் வீசினார். அந்த ஓவரில் இறங்கி விளையாட முயன்ற மேக்ஸ்வெல்லை தோனி ஸ்டம்பிங் செய்ய முயற்சித்தார். ஸ்டம்பிங் செய்த தோனி அப்பீல் கேட்கவில்லை. ஆனால், குல்தீப் அவுட் கேட்டார்.
இதனையடுத்து, லெக் திசையில் நின்ற நடுவர், அவுட் என்பதை முடிவு செய்ய மூன்றாவது நடுவரின் தீர்ப்பு சைகை காட்டினார். பின்னர், தோனியிடம் நெருங்கி வந்த நடுவர் இது அவுட்டா என்று கேட்டார். அப்போது, இல்லை என்பது போல் அவர் தன்னுடைய தலையை ஆட்டினார் தோனி.
பின்னர், மூன்றாவது நடுவரின் முடிவிலும் அவுட் இல்லை என்றே வந்தது. முதலில் அவுட் என்று கேட்ட குல்தீப் யாதவும், தோனி எதுவும் கேட்காததை பார்த்ததும் இது அவுட் இல்லை என்று அமைதியாகிவிட்டார்.
முன்னதாக, தன்னுடைய சொந்த மைதானமான ராஞ்சியில் பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் நுழைந்த தோனிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், தங்களுடைய செல்போனில் எல்லோரும் ஒரே நேரத்தில் லைட் அடித்து காட்டினர்.