விளையாட்டு

காதலியைக் கரம்பிடிக்கும் கே.எல்.ராகுல்.. உறுதியான திருமணம்!

PT

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுலுக்கும் நடிகை அதியா ஷெட்டிக்கும் வரும் ஜனவரி 23ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக இருப்பவர், கே.எல்.ராகுல். ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பொறுப்புணர்ந்து இவர் அடித்த அரைசதம் (64 ரன்கள்) இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதுடன், கோப்பையையும் கைப்பற்ற வழிகோலியது. இந்த நிலையில், கே.எல்.ராகுலும், பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சுனில் ஷெட்டியின் மகள் நடிகை அதியா ஷெட்டியும் நீண்ட நாட்களாகக் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. கே.எல்.ராகுல் உடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, அவருடன் ஜோடியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த அதியா ஷெட்டி, கடந்த ஆண்டு தங்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்தார்.

அவர்களுடைய காதல் குறித்து மனம் திறந்த அதியாஷெட்டியின் தந்தை சுனில் ஷெட்டி, ”அவர்களுடைய திருமணத்தை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதை, அவர்கள் விரைவில் முடிவு செய்வார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது இவர்களுடைய காதல், திருமணத்தில் முடிய இருக்கிறது. அதற்கான தேதியை இருவீட்டாரும் முடிவு செய்திருப்பதாக தகவல் உறுதியாகி உள்ளது.

அதன்படி, இவர்களுடைய திருமணம் வரும் ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன்கள் தோனி, விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. திருமணத்திற்குப் பிறகு மும்பையில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் இருவரும் குடியேற இருக்கிறார்களாம்.