சென்னை-சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் ஐந்தாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனால் மும்பை அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை குவித்தது.
மும்பை அணிக்காக ரோகித் ஷர்மா மற்றும் டி காக் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். டி காக் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்து வருண் சக்கரவர்த்தியின் சுழலில் ஆட்டமிழந்தார். மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய சூரியகுமார் யாதவ், கேப்டன் ரோகித் உடன் கூட்டணி அமைத்தார். இருவரும் 76 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் சூரியகுமார் யாதவ் பெவிலியன் திரும்பினார். அவரை ஷகிப் அல் ஹசன் அவுட் செய்திருந்தார். தொடந்து மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. இஷான் கிஷன் (1 ரன்னிலும்), ரோகித் (43 ரன்களிலும்), ஹர்திக் பாண்ட்யா (15 ரன்களிலும்) அடுத்தடுத்து அவுட்டாகினர். அதனால் டெத் ஓவரில் மும்பை அணி மீண்டும் ரன் சேர்க்க தவறியது.
பத்து ஓவர்கள் முடிவில் 81 ரன்களை குவித்திருந்த அந்த அணி அதற்கடுத்த பத்து ஓவர்களில் வெறும் 71 ரன்களை மட்டுமே குவித்து 9 விக்கெட்டுகளையும் இழந்தது.கொல்கத்தா அணிக்காக ரசல் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கம்மின்ஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். வருண், ஷகிப், பிரசீத் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
அதனால் கொல்கத்தா அணி 153 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது.