விளையாட்டு

கபடி வீரர்களின் ஆடைகளில் அரசியல் கட்சி, சாதிய அடையாளங்கள் இருக்க கூடாது - நீதிமன்றம்

webteam

கபடி போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள், அரசியல் தலைவர்களின் படங்கள், சாதிய ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த தாசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணபுரத்தில் மாலை நேர கபடி போட்டி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி, "கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள் அல்லது அரசியல் தலைவர்களின் படங்கள் மற்றும் சாதிய ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது என கூறினார்.

மேலும் போட்டிகளின் போது அரசியல் மற்றும் சாதிய ரீதியிலான பாடல்கள் ஒளிபரப்பக் கூடாது எனவும், அரசியல் கட்சிகள் மற்றும் சாதிய கட்சிகளின் புகைப்படங்களை பிளக்ஸ் பேனர்களில் வைக்க கூடாது எனவும் அறிவுறுத்தினார். மற்றும் கபடி விளையாட்டு நடைபெறும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் எனவும், அங்கு முதலுதவி சிகிச்சைகளுக்கான அனைத்து உபகரணங்களும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும். மற்றும் போட்டியில் பங்கேற்பவர்கள் போதை பொருட்கள் மற்றும் மது அருந்தியிருக்கக் கூடாது என்ற நிபந்தனையையும் அறிவித்தார்.

தொடர்ந்து இந்த நிபந்தனைகளை மீறும் வகையில் போட்டிகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து போட்டியை நிறுத்தலாம் என்ற கட்டுப்பாடுகள் விதித்து, கபடி போட்டிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.