விளையாட்டு

13 புள்ளி 23 நொடிகள்.. சர்வதேச தடகளப்போட்டியில் தங்கம் வென்று இந்தியாவின் ஜோதி புதிய சாதனை

சங்கீதா

சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யாரஜ்ஜி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

லிமாஸோல் நகரில் நடந்த இந்தப் போட்டியில், பந்தய இலக்கை 13 புள்ளி 23 நொடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையுடன் ஜோதி யாரஜ்ஜி முதலிடம் பிடித்தார். இதற்கு முன்னர் 2002-ம் ஆண்டு 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் அனுராதா பிஸ்வால் 13 புள்ளி 38 வினாடிகளில் கடந்ததே இதுவரை தேசிய சாதனையாக இருந்து வந்தது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக யாராலும் அவரது அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த 22 வயதே ஆன ஜோதி யாரஜ்ஜி தற்போது முறியடித்துள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தப்போட்டியில் சைப்ரஸைச் சேர்ந்த நடாலியா கிறிஸ்டோஃபி 13 புள்ளி 34 வினாடிகளில் போட்டி தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், கீரீஸ் நாட்டைச் சேர்ந்த வீராங்க அனாய்ஸ் கரகியாணி 13 புள்ளி 47 வினாடிகளில் பந்தைய தூரத்தைக் கடந்து வெண்கலப் பத்தக்கத்தையும் வென்றனர்.