விளையாட்டு

பட்லர் தயவால் சவாலான நிலையில் இங்கிலாந்து அணி!

பட்லர் தயவால் சவாலான நிலையில் இங்கிலாந்து அணி!

webteam

நான்காவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து, 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் சாம் கர்ரன் 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தரப்பில் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 273 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. புஜாரா அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 5 விக்கெட்டுகளையும் பிராட் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

பின்னர் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து வீரர்கள் குக் (12 ரன்), மொயீன் அலி (9 ரன்), ஜென்னிங்ஸ் (36 ரன்), பேர்ஸ்டோ (0) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க, நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஜோ ரூட் 48 ரன், முகமது ஷமியால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அப்போது இங்கிலாந்து 5 விக்கெட்டுக்கு 122 ரன்களுடன் இருந்தது.

பிறகு பென் ஸ்டோக்ஸும் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அணியை சரிவில் இருந்து மீட்க பொறுமையாக ஆடினர். ஸ்டோக்ஸ் 30 ரன்களில் அஸ்வின் சுழலில் ஆட்டம் இழந்தார். பட்லர் 69 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

(பட்லர்)

அடுத்து வந்த ரஷித், சாம் கர்ரனுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய ரஷித் 11 ரன்னில் ஷமி பந்து வீச்சில் கேட்ச் ஆனார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து வலுவான நிலையை எட்டியது. கர்ரன் 37 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதையடுத்து அந்த அணி 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், அஸ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். நான்காம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.