விளையாட்டு

நடுவரிடம் வாக்குவாதம்: இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம்!

webteam

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. பர்‌மிங்காமில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிக பட்சமாக ஸ்மித் 85 ரன்களை சேர்த்தார். 

224 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 33 ஆவது ஓவரிலேயே இங்கிலாந்து, வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் அதிரடியை வெளிப்படுத்திய ஜேசன் ராய், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பந்தாடினார். 20 வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பந்தை அடிக்க முயற்சிக்கும்போது, பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது. கேரி, அவுட் என்று முறை யிட்டதும் நடுவர் தர்மசேனா, விரலை உயர்த்தி விட்டார்.

அதிர்ச்சி அடைந்த ராய், பந்து பேட்டில் படவில்லை என்று நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். டி.ஆர்.எஸ். வாய்ப்பு பயன்படுத்தப்பட்டு விட்ட தால் வேறு வழியின்றி அதிருப்தியோடு பெவிலியன் திரும்பினார், ராய். டிவி. ரீப்ளேயில் அது அவுட் இல்லை என்று தெளிவாக தெரியவந்தது. ராய், 65 பந்தில், 5 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரி களுடன் 85 ரன்கள் குவித்திருந்தார். 

இந்நிலையில் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக, அவருக்கு போட்டிக் கட்டணத்தில், 30 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது.