விளையாட்டு

“இதை நான் எதிர்பார்க்கவே இல்லை; என் கனவு நிஜமாகி உள்ளது” - வெங்கடேஷ் ஐயர் நெகிழ்ச்சி

EllusamyKarthik

நியூசிலாந்து அணிக்கு எதிராக வரும் 17-ஆம் தேதியன்று தொடங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஆல் ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர். 

அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அதிரடியாக விளையாடி ரன் சேர்த்து அசத்திய அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அவர். 

“உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. நம் நாட்டில் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிய வேண்டுமென்ற கனவு இருக்கும். எனக்கும் அப்படி தான். இப்போது அது நிஜமாகி உள்ளது. அதை எண்ணி நான் மகிழ்கிறேன். என்னை அணியில் தேர்வு செய்த தேர்வுக்குழுவினர், கேப்டன், பயிற்சியாளர் மற்றும் எனது சீனியர்களுக்கு இதனால் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

என்னிடமிருந்து அணி என்ன எதிர்பார்க்கிறதோ அதை நான் நிச்சயம் பூர்த்தி செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணிக்காக 10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 370 ரன்களை குவித்திருந்தார். மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.