விளையாட்டு

ஐபிஎல் நிறைவு விழா - 'நோ தமிழ்ப் பாடல்' ! முழுவதும் இந்திப் பாடல்களை பாடி அசத்திய ஏஆர்ஆர்

ச. முத்துகிருஷ்ணன்

ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இம்முறை கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி இன்றிரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் சீசன் நிறைவு விழா நடைபெற்றது.

முதலில் ரன்வீர் சிங் நடனமாடி அரங்கம் முழுவதும் நிறைந்த ரசிகர்களுக்கு விருந்தளித்தார். நடிகர் விஜயின் “வாத்தி கம்மிங்” பாடலும் ரன்வீர் ஆடிய பாடல் வரிசையில் இடம்பெற்றது. ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற “நாட்டுக் குத்து”, இந்த வருடத்தில் வெளியாகி மெகா ஹிட்டான கே.ஜி.எஃப் படத்தின் பாடல்களுக்கும் ரன்வீர் சிங் நடனமாடினார்.

இதையடுத்து ஏ.ஆர். ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியும் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. “வந்தே மாதரம்” பாடலில் தன் இசை நிகழ்ச்சியை துவங்கினார் ரகுமான். “முக்காலா முக்காபுலா”, “ஜனகனமண”, பாய்ஸ் படத்தின் பாடல் உள்பட பல பாடல்களை ரகுமான் பாடி அசத்தினார். இந்த பாடல்கள் அனைத்தும் தமிழிலும் வெளியாகியுள்ள போதிலும் ரகுமான் அவற்றின் இந்திப் பதிப்பையே மேடையில் பாடினார்.

கடந்த மாதம் இந்தி மொழி விவகாரம் தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்த நிலையில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்து இருந்தார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்” என்ற வரிகளை ஏ.ஆர்.ரகுமான் சுட்டிக்காட்டி ழகரம் ஏந்திய தமிழணங்கு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.