விளையாட்டு

ஐபிஎல் 2022: பிப்.12, 13-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் மெகா ஏலம்!

EllusamyKarthik

ஐபிஎல் 2022 சீசனில் பத்து அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் நகரை அடிப்படையாக கொண்ட இரண்டு அணிகள் இணைந்துள்ளன. இந்த நிலையில் 2022 சீசனுக்கான வீரர்களை 10 அணிகளும் ஏலத்தில் எடுக்கும் வகையிலான மெகா ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் புதிய அணிகள் மூன்று வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் விரைவில் தேர்வு செய்த வீரர்களின் இறுதி பட்டியலை சமர்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் விவோ நிறுவனத்திடமிருந்து டாடா நிறுவனத்தின் வசம் தற்போது கைமாற்றப்பட்டுள்ளது. 2022 சீசன் டாடா ஐபிஎல் என பிராண்ட் செய்யப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில் எதிர்வரும் சீசனை விமான போக்குவரத்து இல்லாத நான்கு முதல் ஐந்து மைதானங்களில் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.