விளையாட்டு

"செப்டம்பரில் ஐபிஎல் போட்டிகள்.. 7 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு” பிரிஜேஷ் படேல்

jagadeesh

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரக்கத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐக்கிய அரபு அமீரகமம், நியூசிலாந்து ஆகியவை பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த முடிவு பிசிசிஐ நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்துள்ள பிரிஜேஷ் படேல் "ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம். அதற்கு மத்திய அரசும் இசைவு தெரிவித்துள்ளது. எனவே செப்டம்பரில் ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெறும். போட்டியின் விவரங்கள் 7 நாள்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.