ஐபிஎல் போட்டிகளில் ஆண்டுதோறும் கோப்பைக்காக ஆசைப்பட்டு, கடைசியில் தோல்வியை மட்டுமே தூக்கிச் செல்லும் அணிகளுள் ஒன்றாக இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற உற்சாக வசனத்துடன், இந்த முறை கோப்பையை வெல்வோம் என்ற உறுதிமொழியுடன் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் மட்டுமே பரிசாக கிடைக்கிறது. இருந்தாலும் ஆண்டு தோறும் அந்த அணி தங்கள் வசனத்தை மாற்றாமல் ‘ஈ சாலா கப் நம்தே’ என முழங்கி வருகிறது. ஆர்.சி.பி ரசிகர்களும் சற்றும் அசராமல் அதே வசனத்தை கூறி வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு வருடமும் கோப்பையை வென்ற பாடில்லை. இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அதிக மீம்ஸ்களை வாங்கிய அணி என்ற பெருமையை வென்றுவிடுகிறது.
2008ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மொத்தம் 12 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒருமுறையும், அதே ஹைதராபாத் அணி முன்னதாக டெக்கான் சார்சஸ் என்ற பெயரில் இருக்கும்போது ஒருமுறையும் வென்றுள்ளது. இந்த 12 ஆண்டுகளில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத அணியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இருக்கின்றன. இதில் பலமாக இருந்தும் பரிதாபமாக வெளியேறும் அணி பெங்களூர் தான்.
இத்தனைக்கும் இந்திய அணியின் கேப்டனாக வெற்றிகளை வாரிக்குவிக்கும் விராட் கோலி தான் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கிறார். ஆனாலும் கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கடைசி இடத்தை பிடித்தது பெங்களூர். அந்த அணியின் தோல்வியை பார்த்த மற்ற ரசிகர்கள் கூட, ஒருமுறை ஜெயித்துக்கொள்ளட்டுமே என இறக்கப்படும் அளவிற்கு பெங்களூரின் நிலைமை மோசமடைந்தது.
இதற்காக அவர் பெங்களூர் அணியில் பெரும் மாற்றத்தை அதிரடியாக செய்தார். இந்த முறை ஏலத்திற்கு முன்பு பெங்களூர் அணியில் இருந்து 12 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இதில் முன்னணி வீரர்களான மார்கஸ் ஸ்டொயினிஸ், சிம்ரான் ஹெட்மெயர், நாதன் கவுல்டர்-நைல், கோலின் டி கிரான்ஹோம், டிம் சவுதி மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோரும் அடக்கம். இதைத்தொடர்ந்து நடந்த ஏலத்தில், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் ஃபின்ச், ஜோசுவா பிலிப், கேன் ரிச்சர்ட்சன், தென்னாப்பிரிக்க வீரர்கள் கிரிஸ் மோரிஸ், மீண்டும் டேல் ஸ்டெயின் மற்றும் இலங்கை வீரர் இசுரு உதானா ஆகியோரை பெங்களூர் அணி வாங்கியது. இதுதவிர இந்திய இளம் வீரர்களான பவன் மற்றும் அஹமத் ஆகியோரும் வாங்கப்பட்டனர்.
இதுமட்டுமின்றி அணிக்கு புதிய நம்பிக்கையை வழங்க வேண்டும் என்ற வகையில் பெயர் மற்றும் லோகோ மாற்றப்பட்டுள்ளது. ஆர்.சி.பி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) அணியின் பெயரிலிருந்த பெங்களூர் நீக்கப்பட்டு ராயல் சேலஞ்சர்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தள கணக்குகளிலும் இந்த மாற்றம் வந்துள்ளது. மேலும், அணியின் லோகோவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதையும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். அணியின் பெயரை மாற்றுவதால் பலனில்லை, அணியை சரியாக அமையுங்கள் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதையும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறை செய்யவுள்ளது.
ஏற்கெனவே அணியில் இருக்கும் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், பார்திவ் படேல், மொயின் அலி, யஸ்வேந்திர சாஹல், பவன் நெகி, உமேஷ் யாதவ், சிவம் டூபே, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி உள்ளிட்ட வீரர்கள் 2020 ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் அணியிலும் இடம் பிடிப்பார்கள் எனத் தெரிகிறது. இவர்களுடன் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் அல்லது ஸ்டெயின் அணியில் சேர்க்கப்படலாம். இவ்வாறாக சிறப்பான ஒரு அணியை தேர்வு செய்யலாம் என ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அத்துடன் உருவாகும் புதிய அணியை, இந்திய அணியைப் போன்றே வழி நடத்தி கோப்பையை வெல்லலாம் எனவும் கோலி திட்டமிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ஆர்.சி.பி அணியில் பலமாக பேட்டிங் இருந்தது. அதேசமயம் சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொதப்பினர். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் ஒரு சில வீரர்களே சிறப்பாக செயல்பட்டனர். முக்கிய நேரத்தில் கைகொடுக்க அனுபவ வீரர்கள் யாரும் இல்லை. இதற்கெல்லாம் மேலாக கோலியின் கேப்டன்ஷிப் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்தன. இதையெல்லாம் இந்த முறை மாற்ற அந்த அணி முயலும் எனத்தெரிகிறது. 2020ல் ஆரோன் ஃபின்ச் ஆலோசனை அந்த அணிக்கு பலமாக அமையலாம். ஸ்டெயின், சைனி, உமேஷ் யாதவ், சாஹல் ஆகியோரின் பந்துவீச்சும், கோலி, வில்லியர்ஸ், பார்திவ் படேல், ஃபின்ச் ஆகியோரின் பேட்டிங் பலத்தை அதிகரிக்கும். இதுதவிர ஆல்ரவுண்டர்களான சிவம் டூபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் டி20 போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருப்பது கூடுதல் பலம்.