விளையாட்டு

தவறவிட்ட சாதனையை இன்று நிறைவேற்றுவாரா விராட் கோலி?

தவறவிட்ட சாதனையை இன்று நிறைவேற்றுவாரா விராட் கோலி?

webteam

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளனர். இந்த இரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் இந்தப் போட்டியை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளனர். இதனால் இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல் படாததால் அவர்கள் 200 ரன்களுக்கு மேல் விட்டுகொடுத்தனர். மேலும் கடந்த போட்டியின்போது முக்கிய பந்துவீச்சாளர் பும்ரா காயம் அடைந்திருந்தார். அதனால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவாரா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எனினும் அவர் மும்பை அணியின் பயிற்சியின் போது பந்துவீசியதால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியில் பெங்களுர் அணி பேட்டிங்கில் சொதப்பி இருந்தது. அவர்கள் வெறும் 70 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் தொடக்கம் முதலே சரியாக பேட்டிங் செய்யவில்லை. இன்று நடைபெறும் போட்டியில் இவர்கள் இருவரும் அசத்துவார்கள் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

போட்டி நடைபெறும் சின்னசாமி மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்கே அதிகம் கைக்கொடுக்கும் எனக் கருதப்படுகிறது. இரு அணிகளும் பேட்டிங்கில் கலக்கும் பட்சத்தில் ரசிகர்களுக்கு இந்தப் போட்டி நல்ல விருந்தாக அமையும். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மும்பை மற்றும் பெங்களுர் அணிகள் 25 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதில் 16 போட்டிகளில் மும்பை அணியும், 9 போட்டியில் பெங்களுர் அணியும் வென்றுள்ளனர். சின்னாசாமி மைதானத்தில் நடைபெற்றுள்ள 9 போட்டியில் மும்பை அணி 7 போட்டிகளிலும் பெங்களுர் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தப் போட்டியில் சில சுவாரஸ்யமான குட்டி மோதல்களும் இருக்கும். குறிப்பாக இது கோலி-பும்ராவுக்கும் இடையே நிலவும் போட்டி. ஏனென்றால் ஐபிஎல் தொடருக்கு முன் வந்த விளம்பரத்தில் பும்ரா, கோலிக்கு சவால் விடும் வகையில் காட்சி இருந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரும் இன்று களத்தில் விளையாடவுள்ளனர். அதேபோல குருனல் பாண்ட்யா- டிவில்லியர்ஸ் இடையே நிலவும் போட்டி. இதுவரை குருனல் பாண்ட்யா டிவில்லியர்சை 4 முறை அவுட்டாக்கியுள்ளார். அதனால் இன்றும் அவர் டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னசாமி மைதானத்தில் இதுவரை பெங்களுர் அணி சேஸ் செய்யும் போதே அதிக வெற்றி பெற்றுள்ளது. அதாவது 35 போட்டிகளில் 19 போட்டியில் சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இரண்டாவது பேட்டிங் செய்ய வாய்ப்பு அதிக உள்ளது. 

அத்துடன் விராட் கோலி கடந்தப் போட்டியில் தவறவிட்ட சாதனையை இன்று நிறைவேற்றுவார் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். அதாவது ஐபிஎல் வரலாற்றில் 4000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை இன்று படைப்பார் என நம்பப்படுகிறது. எனினும் கிரிக்கெட் விளையாட்டில் எல்லாம் அன்றைய நாளில் வீரர்கள் விளையாடுவதை பொறுத்தே தான் அமையும் என்பதால் இன்றையப் போட்டி எவ்வாறு இருக்கும் என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.