விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது மும்பை..!

கொல்கத்தாவை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது மும்பை..!

webteam

முக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 13  ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ். 

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 4 மணிக்கு தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்கோர் 91 ரன்னாக இருக்கும்போது எவின் லெவிஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். 

அடுத்து களம் இறங்கிய ரோகித் சர்மா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. அடுத்து 182 ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது. 


 தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் லின் ஆகியோர் களம் இறங்கினார்கள். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த இளம் வீரர் சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த களம் கண்ட உத்தப்பா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். 13 பந்தில் 17 எடுத்து இருந்த லின் ஆட்டமிழக்க அடுத்து உத்தப்பாவுடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். சரியான பந்துகளை அடித்து ஆடிய வந்த இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் கொல்கத்தா அணி எளிதாக வெற்றி பெரும் என்று நினைத்த நிலையில் 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த உத்தப்பா ஆட்டமிழந்தார். அதன் பின் ஆட்டத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது. ராணா 31 ரன்களுக்கும், அதிரடி ஆட்டகாரர் ரசூல் 9 ரன்களுடன் ஆட்டமிழக்க ஆட்டத்தின் போக்கே மாறியது. கடைசி கட்டத்தில் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடியபோதும் 20 ஒவரில் 6 விக்கெட் இழந்து 168 ரன்கள் மட்டுமே கொல்கத்தாவால் சேர்க்க முடிந்தது. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது.