4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் போட்டிகள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் இன்று 4வது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் ஷர்மா, ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 137 பந்துகளில் அவர் 162 ரன்கள் எடுத்தார். இவரது ஆட்டம் அணியின் ஸ்கோர் உயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. இதற்கிடையே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 81 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து 378 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை எதிர்த்து விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் காலீலின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். அனைத்து விக்கெட்டுகளும் சரிந்த போதிலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கவுரவமான ரன்களை அணி எட்ட வேண்டும் என்பதற்காக இறுதி வரை போராடி அரை சதம் 54 (70) அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். இதனால் அந்த அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தோல்வியடைந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.