விளையாட்டு

அறிமுக டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அரை சதம்.. நிதானமாக விளையாடி அசத்திய ஷ்ரேயஸ் ஐயர்!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கான்பூர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கி உள்ளது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே, முதலில் பேட் செய்ய விரும்புவதாக சொல்லி இருந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் இறங்கியுள்ள ஷ்ரேயஸ் ஐயர், தனது முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ளார். 

அதுவும் இந்திய அணி 145 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த அரை சதத்தை பதிவு செய்துள்ளார் ஷ்ரேயஸ். 

தொடக்கத்தில் லேசான பதட்டத்துடன் இன்னிங்ஸை தொடங்கிய அவர் தற்போது களத்தில் மிகவும் நேர்த்தியாக விளையாடி வருகிறார். 94 பந்துகளில் அரைசதம் பதிவு செய்துள்ளார் அவர். இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் அசல் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அசத்தலான வருகையை  பதிவு செய்துள்ளார் அவர். 

சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் திறமை வாய்ந்த இளம் வீரர்களின் கைகளில் தான் உள்ளது என்பது மாதிரியான கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன. 

இந்திய அணி 80 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயாஷ் ஐயர் 69*, ஜடேஜா 40* ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர். முன்னதாக தொடக்க வீரர் சுப்மன் கில்லும் 52 ரன்கள் அடித்து அரைசதத்தை பதிவு செய்திருந்தார்.