ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் பாக்சிங் டெஸ்ட் போட்டியின் வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கேப்டன் ரஹானேவின் பெயரை கொக்கரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவரது ஆட்டம் இருந்தது. வழக்கமாக கிரிக்கெட் விளையாட்டில் எப்போதுமே நெருக்கடியான நிலையில் தான் புதிய கேப்டன்கள் அவதரிப்பார்கள். டிராவிடுக்கு பிறகு தோனியும், தோனிக்கு பிறகு கோலியும், இப்போது வந்துள்ள ரஹானே வரை எல்லோருமே அப்படி உருவானவர்கள் தான்.
இதில் ரஹானே விஷயத்தில் ஸ்பெஷல் என்னவென்றால் பெரிய அளவில் அனுபவம் எதுவும் இல்லாத இளம் இந்திய அணியை வழிநடத்தியது தான். கேப்டன் கோலி இந்தியா திரும்பியது, இஷாந்த் ஷர்மா தொடரிலிருந்து விலகியது, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஷமி இல்லாதது என எதுவுமே இல்லாத நிராயுதபாணியாக தான் ரஹானே இருந்தார். ஆனால் அவரிடமிருந்தது எல்லாம் நம்பிக்கை மட்டுமே. அது முயன்றால் முடியும் என்ற நம்பிக்கை.
கோலி இல்லாத இந்தியா நிச்சயம் அனைத்து போட்டிகளையும் இழக்கும் என கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் அளவிற்கு உறுதியாக சொல்லி இருந்தனர் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள். பாண்டிங், மார்க் வாஹ், மைக்கேல் கிளார்க் என எல்லோருமே இதை தான் முன்மொழிந்திருந்தார்கள். அவர்கள் அப்படி சொல்ல பலமான காரணமும் இருந்தது.
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் மரண அடி வாங்கியது. 36 ரன்களுக்கு ஆல் அவுட். அதை வைத்து வந்தவர்கள், போனவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு அட்வைஸ் கொடுத்தனர். மனதளவில் முடியுமா என துவண்டு கிடந்த இந்திய அணி வீரர்களை ‘கமான் பாய்ஸ்’ என உத்வேகம் கொடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ‘தோற்றாலும் பரவா இல்லை முதல்ல சண்ட செய்யலாம் வாங்க’ என சொல்லி களத்திற்கு கூட்டி சென்றார் ரஹானே.
“ரஹானேவை ஒரு பேட்ஸ்மேனாக தான் எனக்கு தெரியும். அவனது கேப்டன்சியை பார்த்து அசந்துவிட்டேன். அமைதியாக இருந்து கொண்டே ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்து விட்டான். அவன் கொண்டிருக்கும் தலைமை பண்பு அவனது ஜீனிலேயே இருக்கும் என நினைக்கிறேன். அனைத்தையுமே திட்டமிட்டு செய்பவன் அவன். அதை தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் அவன் செய்துள்ளான்” என சொல்கிறார் ரஹானேவின் பேட்டிங் பயிற்சியாளரும், வழிகாட்டியுமான பிரவின் ஆம்ரே.
ரஹானேவும் கேப்டன்சியும்…
இந்திய கிரிக்கெட் அணியை டெஸ்ட் போட்டியில் மூன்று முறை வழிநடத்தி உள்ளார். 2017இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தரம்சாலா மற்றும் 2018இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவிலும் வழிநடத்தி உள்ளார். இரண்டு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி தான் இது. அயல்நாட்டில் இந்தியாவை முதல்முறையாக வழிநடத்தினார் கேப்டன் ரஹானே.
டாஸை இழந்தார். ஆஸ்திரேலியா பவுலிங் செய்ய பணித்தது, தளரவில்லை. தனது திட்டத்தை சிந்தாமல் சிதறாமல் களத்தில் அப்ளை செய்தார். முதல் பத்து ஓவருக்குள்ளேயே ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் பேட்டிங் ஃபேரை வீழ்த்துவது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பேட்டிங் அஸ்திவாரமும், நம்பிக்கையுமான டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நிலை வீரரான ஸ்மித்தை சமத்தாக வீழ்த்துவது. மற்றொரு நம்பிக்கை லபுஷேனை போட்டுத் தள்ளியது என அடுக்கடுக்காக முதல் இன்னிங்ஸில் தனது திட்டங்களை எடுத்து வைத்துக் கொண்டே இருந்தார். ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குறிப்பாக AGGRESSIVE ஃபீல்டிங் செட் அப்பை கடைப்பிடித்து ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஸ்கெட்ச்சை ரஹானே போட்டிருந்தார். அவரது திட்டத்திற்கு இந்திய பவுலர்களும் கைகொடுத்தனர்.
அதே போல இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் டெயில் எண்ட் பேட்ஸ்மேன்கள் தான் இம்சை கொடுப்பார்கள். இது தோனி கேப்டனாக இருந்த காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. ஆனால் இந்த ஆட்டத்தில் அதையும் சமத்தாக கையாண்டிருந்தார் ரஹானே.
தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்த போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வீழ்ந்த போதும் கேப்டன் என்ற பொறுப்பை ஏற்றதற்கு பொருத்தமாக நின்று நிதானமாக விளையாடினார் ரஹானே. முதல் இன்னிங்ஸில் 112 ரன்கள். அது இந்தியாவுக்கு வலுவான முன்னிலையை கொடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு பந்து வீச்சாளர் குறைவாக இருந்த போதும் அசராமல் தனது திட்டங்களை நிறைவேற்றினார் ரஹானே. அதனால் ஆஸ்திரேலியா 70 ரன்களை மட்டுமே டார்கெட்டாக கொடுத்தது.
சுலப இலக்கை இந்தியா கூலாக சேஸ் செய்யும் என் எதிர்பார்க்க அங்கேயும் தடுமாற்றம். மீண்டும் சூப்பராக விளையாடி அணியை வெற்றி பெற செய்தார். வெற்றிக்கான ரன்களை அடித்தார் கேப்டன் ரஹானே. அதன் மூலம் அடிலெய்டில் பெற்ற தோல்வியை குழி தோண்டி மெல்பேர்னில் புதைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் அணியின் வெற்றிக்காக சதம் விளாசிய மற்றும் ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் கேப்டன். தோனியை தொடர்ந்து கேப்டனாக அணியை வழிநடத்திய முதல் மூன்று போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுத்தவர் என பல சாதனைகளை ரஹானே படைத்துள்ளார்.
“அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அடிலெய்டில் பெற்ற தோல்விக்கு பிறகு நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் கேரக்டரை வெளிப்படுத்தியது தான் இந்த வெற்றிக்கான காரணம். அறிமுக வீரர்கள் கில் மற்றும் சிராஜின் ஆட்டம் சூப்பர்” என Post Match Presentation பேட்டியில் சொல்லியிருந்தார் வெற்றி வாகை சூடிய கேப்டன் ரஹானே.
கிரிக்கெட் வீரரர்களுக்கு கேப்டன்சி பொறுப்பை கொடுத்தால் அவர்களது ஆட்டத்திலும் சொதப்பி, அணியின் வீழ்ச்சிக்கும் காரணமாகி விடுவார்கள். அதே நேரத்தில் சில வீரர்கள் அவர்களது ஆட்டத்திலும் பட்டை தீட்டிய வைரமாக இருந்து அணியையும் வெற்றி பெற செய்வார்கள். ரஹானே அதில் இரண்டாவது ரகம்.
வாழ்த்துகள் கேப்டன்!