விளையாட்டு

ஷ்ரேயஸ் ஐயர் - ஜடேஜா அசத்தல்: இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா!

EllusamyKarthik

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 183 ரன்களை எடுத்திருந்தது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். 

ரோகித் முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். கிஷன் ஆறாவது ஓவரில் அவுட்டானார். பின்னர் வந்த சஞ்சு சாம்சனுடன் கூட்டணி அமைத்தார் ஷ்ரேயஸ் ஐயர். இருவரும் 84 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சஞ்சு, 25 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். இருந்தும் இந்தியா வேக வேகமாக வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் ஜடேஜா காட்டிய அதிரடி. பேட்டை சுழட்டி மாஸ் காட்டிவிட்டார் அவர். 

அதன் பலனாக இந்தியா 20 ஓவர்கள் முடிய 17 பந்துகள் எஞ்சியிருக்க ஆட்டத்தை வென்றது. 17.1 ஓவர்கள் முடிவில் இந்தியா 186 ரன்களை எடுத்தது. அதன் மூலம் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்த வெற்றியுடன் சேர்த்து கடைசியாக விளையாடிய 11 டி20 போட்டிகளிலும் எதிர்த்து ஆடிய அணியினரால் வீழ்த்த முடியாத அணியாக இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது. ஜடேஜா 45 ரன்களுடனும், ஷ்ரேயஸ் 74 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நாளை இந்த தொடரின் கடைசி போட்டி நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2 - 0 என வென்றுள்ளது.