விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து 101/2

JustinDurai

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்ற நிலையில் நேற்று 3ஆம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடர்ந்தது.

போட்டி தொடங்கிய 3வது ஓவரிலேயே கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை இந்தியா இழந்தது. அவர் 44 ரன்கள் எடுத்திருந்தப்போது ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துணை கேப்டன் ரஹேனா 49 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வீரர்களில் அஸ்வின் மட்டும் 22 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்களையும், போல்ட், வேக்னர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியில் லாதம், கான்வே களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் லாதம் 30 ரன்களை எடுத்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த கான்வே 54 ரன்கள் எடுத்தபோது விக்கெட்டை பறிகொடுத்தார். நியூசிலாந்து அணி 101 ரன்னில் கேப்டன் வில்லியம்சன் 12 ரன்களுடனும் ரோஸ் டெயிலர் ரன் கணக்கை தொடங்காமலும் களத்தில் இருந்தப்போது, போதிய வெளிச்சம் இன்மை காரணமாக முன்னதாகவே ஆட்டம் நிறுத்தப்பட்டது