உலகக் கோப்பை தொடரில் முக்கியமான மற்றொரு சாதனையை படைக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் துணைக் கேப்டன் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அபாரமாக பேட்டிங் செய்து வருகிறார். எதிரணியின் பந்துகளை விளாசி தள்ளும் அவர், நடப்பு தொடரில் மட்டும் 5 சதம் அடித்துள்ளார். அதன் மூலம், ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், பல சாதனைகளையும் தகர்த்து வருகிறார்.
அந்த வகையில் சச்சின் முக்கியமான சாதனை ஒன்றினை முறியடிக்க அவருக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. உலகக் கோப்பை தொடர்களை பொறுத்தவரை ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனை சச்சின் வசமே உள்ளது. 2003 உலகக் கோப்பை தொடரில் சச்சின் 673 ரன்கள் எடுத்ததே சாதனையாக உள்ளது. நடப்பு தொடரில் ரோகித் சர்மா 647 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 27 ரன்கள்தான் தேவை.
சச்சின் - 673
ஹைடன் - 659
ரோகித் - 647
வார்னர் - 638
ஷகிப் - 606
உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இந்தியா மோதுகிறது. நாளையப் போட்டியில் 53 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் உலகக் கோப்பை தொடரில் 700 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் படைப்பார்.