விளையாட்டு

இன்று கடைசி டி20 போட்டி: இலங்கையை வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

jagadeesh

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-ஆவது டி20 போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியை இந்தியாவும், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியை இலங்கையும் வென்றது. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் கடைசிப் போட்டியை வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்.

இந்தியா தன்னுடைய நேற்றையப் போட்டியில் 5 பேட்ஸ்மேன்கள், 6 பவுலர்களுடன் களமிறங்கியது தோல்விக்கான காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. 20 ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்களை குவிக்க தவறிவிட்டதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

மேலும் நேற்றையப் போட்டியின் ஆடுகளமும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லை. 132 என்ற வெற்றி இலக்கையே இலங்கை பேட்ஸ்மேன்கள் 7 விக்கெட்டுகளை இழந்த பின்புதான் கடைசி ஓவரில் எட்ட முடிந்தது.

இந்நிலையில் இலங்கை அணியில் இன்று பெரிதாக மாற்றம் ஏதும் இருக்காது என்றே தெரிகிறது.நேற்றையப் போட்டியை பொறுத்தவரை இலங்கை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாகவே செயல்பட்டது. ஆனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் புதிய முயற்சிகள் ஏதும் செய்யாமல், நேற்றைய போட்டியில் விடுப்பட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் களமிறக்கப்படுவார்கள் என்றே தெரிகிறது. அதாவது பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இன்றைய அணியில் இடம்பெறுவார்கள் என்றே தெரிகிறது.