விளையாட்டு

இந்தியாவில் அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை ! ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

jagadeesh

இந்தியாவில் அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை நடைபெறும் என்று ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை 2022 ஆம் ஆண்டுக்கு நடத்தப்பட இருப்பதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை இருபது ஓவர் உலகக்கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த நாட்களை பயன்படுத்தி பிசிசிஐ ஐபிஎல் டி20 போட்டிகளை செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துகிறது.

இதனையடுத்து டி20 உலகக் கோப்பையின் நிலை கேள்விக்குறியானது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. மேலும், இந்தாண்டு ரத்தான டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது ஐசிசி.