வெஸ்ட் இண்டீஸ்- இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார். இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியில் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரிஷாப் பன்ட், பேட்ஸ்மேனாக அறிமுகமாகிறார். தவான், ரோகித், விராத் கோலி ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். மிடில் வரிசை இந்திய அணிக்கு இன்னும் சிக்கலாகவே இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் மிடில் வரிசையை பலப்படுத்த வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது. அதற்கு இந்த தொடர் உதவும்.
மூத்த வீரர் தோனி, ஆசிய கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மைதானத்துக்குள் இறங்குவதும் பெவிலியன் திரும்புவதாகவும் இருக்கிறார் என்று அவர் மீது புகார் கூறப்படுகிறது. இருந்தாலும் அவரது அனுபவம் முக்கியம் என இந்திய அணி கருதுவாதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணி இன்னும் சாதிக்க வாய்ப்பிருக்கிறது. பந்து வீச்சில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, குல்தீப், சேஹல் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இளம் வீரர்களை கொண்ட அணியாக இருக்கிறது. முன்னணி வீரர்கள் இல்லாததால் அந்த அணி பலவீனமாக தெரிகிறது. அனுபவ வீரராக சாமுவேல்ஸ் மட்டுமே இருக்கிறார். இருந்தாலும் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் பந்துவீச்சில் மிரட்டுவார்கள்.
இந்த தொடரில் கேப்டன் கோலி, 221 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெறுவார். 187 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைப்பார்.