விளையாட்டு

எல்லைக்கோட்டில் அசத்தல் பீல்டிங்.. பந்தை பாய்ந்து பிடித்த இந்திய வீராங்கனை டியோலின்!

நிவேதா ஜெகராஜா

தனது அசாத்தியமான பீல்டிங் திறமையால், சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஹர்லீன் டியோல். சிக்ஸருக்கு சென்ற பந்தை, அசால்ட்டான கேட்சாக அவற் மாற்றி அசத்தியிருப்பதை தொடர்ந்து, அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்லீன் டியோல், சிறப்பான கேட்ச் செய்து அசத்தியுள்ளார். எல்லைக் கோட்டின் அருகே நின்ற டியோல், இங்கிலாந்தின் ஏமி ஜோன்ஸ் சிக்ஸருக்கு தூக்கி அடித்த பந்தை துள்ளிக் குதித்து பிடித்தார். அப்போது நிலைதடுமாறி பவுண்டரி லைனுக்குள் சென்ற அவர், பந்தை சாமர்த்தியமாக மேலே தூக்கி வீசினார். பின்னர் நொடிப் பொழுதியில் , சுதாரித்துக்கொண்ட டியோல், அந்தரத்தில் பறந்தபடி பந்தை கேட்ச் செய்து அசத்தினார்.

ஹர்லீன் டியோலின் சிறந்த பீல்டிங்கை இந்திய வீராங்கனைகள் மட்டுமன்றி, எதிரணியான இங்கிலாந்து வீராங்கனைகளும் கைதட்டி பாராட்டினார். இந்திய வீராங்கனையின் சிறப்பான செயல்பாட்டிற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.