விளையாட்டு

தென்னாப்பிரிக்க அணி பாலோ-ஆன்: 2 விக்கெட்டை இழந்து தடுமாற்றம்!

webteam

இந்திய அணி பாலோ- ஆன் வழங்கியதை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, அதற்குள் 2 விக்கெட்டை இழந்துள்ளது.

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி, புனேவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங் ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால் 108 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 91 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராத் கோலி 254 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 8 விக்கெட்டை இழந்து 162 ரன்களுடன் தடுமாறிய அந்த அணியை, 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலாண்டரும், கேஷவ் மகராஜூம் நிமிர்த்தினர். பொறுமையாக அடித்து ஆடிய அவர்கள் இந்திய பந்துவீச்சாளர்க ளுக்கு கடும் சவால் அளித்தனர். 72 ரன்கள் சேர்த்த கேசவ் மகராஜை, அஷ்வின் வெளியேற்றினார். அடுத்து வந்த ரபாடா, அஷ்வின் பந்துவீச்சில் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா, 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிலாண்டர் 44 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்திய தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்களும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, நான்காம் நாளான இன்று தென்னாப்பிரிக்காவுக்கு பாலோ ஆன் வழங்கியது.

இதையடுத்து தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரமும் டீன் எல்கரும் களமிறங்கினர். முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே மார்க்ரமை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார் இஷாந்த் சர்மா. இதையடுத்து புருயின், எல்கருடன் இணைந் தார். அடுத்த சில நிமிடங்களிலேயே புருயின் விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ் யாதவ். அவர் 8 ரன்களில் வெளியேற, கேப்டன் டுபிளிசிஸ் வந்தார். 6 ஓவர் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன் எடுத்து ஆடி வருகிறது.