விளையாட்டு

கேப்டனாக வெற்றிக் கணக்கைத் தொடங்கிய கோலி

webteam

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

புனேவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 350 ரன்கள் இலக்கை 48.1 ஓவர்களில் இந்திய அணி எட்டியது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 63 ரன்களுக்குள் யுவராஜ், தோனி உள்ளிட்ட 4 முக்கிய வீரர்களில் விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதையடுத்து 5ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த கேப்டன் விராத் கோலி-கேதர் ஜாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கியது. விராத் கோலி 122 ரன்களிலும், கேதர் ஜாதவ் 120 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. போட்டியின் இறுதி ஓவர்களில் 40 ரன்கள் குவித்து ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் பால் 3 விக்கெட்டுகளும், டேவிட் வில்லி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

முன்னதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அந்த அணியில் ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். அதிகபட்சமாக ஜோ ரூட் 78 ரன்கள் குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 350 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி விராத் கோலி தலைமையில் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.