விளையாட்டு

டிக்ளேர் செய்தது இந்தியா ! பங்களாதேஷ் தேறுமா ?

jagadeesh

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் இந்தியா எடுத்திருந்த நிலையில் இன்று இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதனையடுத்து பங்களாதேஷ் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

இந்தியா - பங்களாதேஷ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மற்றொரு தொடக்க வீரரான ரோகித் ஷர்மா 6 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த புஜாரா அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி 0 (2) ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரஹானே - மயங்க் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரஹானே 86 (172) ரன்களில் விக்கெட்டை இழந்த போதிலும், மயங்க் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மயங்க் மற்றும் ஜடேஜா இருவரும் அதிரடி காட்டினர். இதனால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 243 (330) ரன்கள் குவித்திருந்தபோது மயங்க் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த சாஹா 12 (11) ரன்களில் வெளியேறினார். இவ்வாறாக, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 493 ரன்கள் குவித்தது. ஜடேஜா 60 (76) ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 (10) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி நேற்று மட்டும் 88 ஓவர்களில் 407 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணி தரப்பில், அபு ஜையது 4 விக்கெட் சாய்த்தார்.