சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் புகழ்பெற்ற சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவின் சாதனைகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த பெருமை வீரேந்திர சேவாக்கையே சேரும். 2008ல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 304 பந்துகளில் 319 ரன்களை விளாசினார் சேவாக். 1934 ஆ-ம் ஆண்டு முதல் சென்னையில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 32 டெஸ்ட் நடந்துள்ளது. இதில் இந்திய அணி 14-இல் வெற்றியும், 6-இல் தோல்வியும், ஒன்றில் டையும், 11 போட்டிகள் சமனில் முடிந்துள்ளது.
1934 இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. ஆனால் இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி 1952 இல் சேப்பாக்கம் மைதானத்தில்தான் நடந்தது. அந்தப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி இங்கு 9 டெஸ்டில் விளையாடி 3 இல் வெற்றியும், 5 இல்ல் தோல்வியும், ஒரு போட்டியை சமன் செய்துள்ளது.
இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை இரண்டு முறை முச்சதம் பதிவாகியுள்ளது. இவ்விரு சாதனைகளும் நிகழ்ந்த இடம் சென்னை சேப்பாக்கம் தான். 2008 ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் சேவாக் 319 ரன்களும், 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் கருண் நாயர் 303 ரன்களும் குவித்தனர்.
சென்னையில் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய அணி தோற்றதில்லை. கடைசியாக 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 12 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சென்னையில் 10 டெஸ்டில் விளையாடி 5 சதம் உள்பட 970 ரன்கள் சேர்த்துள்ளார். ஆனால் சேப்பாக்கத்தில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்தது சுனில் கவாஸ்கர், அவர் மொத்தம் 1018 ரன்களை எடுத்துள்ளார்.
அதேபோல சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பளே சேப்பாக்கத்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 7 விக்கெட்டை சாய்த்துள்ளார் அனில் கும்பளே. 1988 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியில் அறிமுக சுழற்பந்து வீச்சாளராக களம் கண்ட நரேந்திர ஹிர்வானி இரு இன்னிங்சையும் சேர்த்து 136 ரன்கள் விட்டுக்கொடுத்து 16 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இந்திய மண்ணில் அதிகபட்ச ரன் சேசிங்கும் சாதனையையும் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. 2008 ஆம் ஆண்டு இங்கு கடந்த போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 387 ரன்கள் இலக்கை இந்திய அணி சச்சின் டெண்டுல்கர் சதம், சேவாக், காம்பீர், யுவராஜ்சிங் ஆகியோரின் அதிரடியாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.