மனைவி மூலம் உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், பாகிஸ்தான் அணியுடன் ஸ்பாட் பிக்ஸிங் புகாரையும் தெரிவித்து இருந்தார். இதனால், இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் வெடித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில், முகமது ஷமி மீதான ஸ்பார்ட் பிக்ஸிங் புகாரில் எந்த முகாந்திரம் இல்லை என கூறி பிரச்னையை பிசிசிஐ முடித்து வைத்தது. இருவர் இடையிலான குடும்ப பிரச்னை மட்டும் தொடர்ந்து வருகிறது. இதையடுத்து இருவரும் பிரிந்திருந்தனர்.
இந்த நிலையில், மனைவி மூலம் உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அம்ரோகா மாவட்ட ஆட்சியரிடம் ஷமி கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ஹேமந்த் குமார் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார். விண்ணப்ப நடைமுறைகள் நிறைவடைந்ததும், ஷமிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
உத்திரபிரதேசம் மாநிலம் ஷகாஸ்புர் அலி நகரில் உள்ள தனது குடும்பத்தினருடன் முகமது ஷமி வசித்து வருகிறார். இந்திய அணிக்கு விளையாடாத நாட்களில் ஷமிக்கு ஒரு தனி பாதுகாப்பு காவலர் போடப்பட்டிருந்தார். பின்னர், அந்த காவலர் திரும்ப பெறப்பட்டார். இந்நிலையில்தான் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷமி 16 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். இதனையடுத்து, மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட தயாராகி வருகிறார்.